கொடநாடு கொலை வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் - கோத்தகிரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் எஸ்டேட் பங்களா உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த பங்களாவில் நுழைந்த 11 பேர், அங்கிருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்தனர்.
மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரை தாக்கிவிட்டு, அங்கிருந்த பொருட்களையும், ஆவணங்களையும் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர்.
அதில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டது தெரியவந்தது. இவரை போலீசார் தேடிவந்த நிலையில் ஆத்தூரில் நடந்த விபத்தில் அவர் பலியானார்.
இதேபோல் 2வது முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சயனும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பின், அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, சதீசன், குட்டி பிஜின், உதயகுமார், வாளையாரை சேர்ந்த மனோஜ் சாமியார், ஜித்தின் ராய், ஜம்ஷீர் அலி, சந்தோஷ் சாமி, வயநாடு மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜித்தின் ராய், ஜம்ஷீர் அலி ஆகியோர் மஞ்சேரி சிறையிலும், திபு, சதீசன், குட்டி பிஜின், உதயகுமார், வாளையார் மனோஜ் சாமியார், சந்தோஷ் சாமி, வயநாடு மனோஜ், சயன் ஆகியோர் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் திபு, சதீசன், குட்டி பிஜின், உதயகுமார், வாளையார் மனோஜ் சாமியார் ஆகிய 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதற்கிடையில், கோவை மத்திய சிறையில் உள்ள சந்தோஷ் சாமி, வயநாடு மனோஜ் ஆகியோர் ஜாமீன் கோரி கடந்த ஜூலை மாதம் தேதி ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களது, மனுவை விசாரித்த நீதிபதி, வயநாடு மனோஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், சந்தோஷ் சாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், சந்தோஷ் சாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கிடையே கோவை சிறையில் உள்ள சயன், திபு, சதீசன், குட்டி பிஜின், உதயகுமார், வாளையார் மனோஜ் சாமியார் ஆகியோரின் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால், அவர்கள் 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 21ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.