கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறையில் மின்சாரம் தாக்கி விஜயன், சோபன், மனு, ஜெஸ்டிஸ் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறை கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவுக்காக பிரமாண்ட அலங்கார வளைவு அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த சிலர் இரும்பு ஏணிகளைத் தூக்கிச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த மின்கம்பத்தின் மீது இரும்பு ஏணி உரசியயுள்ளது. இதனால், ஏணியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அந்த ஏணிகளைத் தூக்கிச் சென்ற 4 பேரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் இன்று (1.3.2025) மாலை நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த விஜயன் (வயது 52) த/பெ. தனிஸ்லாஸ், சோபன் (வயது 45) த/பெ. பெர்னின், மனு (வயது 42) த/பெ. ஒஸ்மான் மற்றும் ஜெஸ்டிஸ் த/பெ. விக்டர் (வயது 35) ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.