சென்னையில் செருப்பில் கடத்தப்பட்ட ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல்..சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு?
எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 9 கிலோ போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செருப்பில் வைத்து போதைப் பொருளை கடத்தி வந்த வாலிபரை கைது செய்து, சுங்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் எத்தியோப்பியாவிலிருந்து வந்த விமானம் ஒன்றில் பெரும் அளவிலான கடத்தல் பொருள் வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் கடும் சோதனையில் ஈடுபட்ட போலீசார், சுற்றுலா விசாவில் எத்தியோப்பியாவிற்கு சென்று விட்டு சென்னை திரும்பிய 35 வயது இக்பால் பாஷா என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவரை அழைத்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவருடைய உடைமைகளை சோதனை செய்தபோது கைப்பை மற்றும் செருப்புகளில் வைத்து போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 9 கிலோ 590 கிராம கோகைன் மற்றும் ஹெராயின் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி அளவிற்கு போதைப் பொருட்கள் சிக்குவது இதுவே முதல் முறை என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:நான் SOFT கிடையாது.. சர்வாதிகாரியாக மாறுவேன்.! அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!
இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட இக்பால் பாஷாவை கைது செய்த போலீசார், இந்த கடத்திலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்றும் இதில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கல் தெரிவிக்கின்றன, இதே போல், கடந்த சில தினங்களுக்கு முன்னால் எத்தியோப்பியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்பட்டது. பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்துமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தமிழகத்திற்குள் போதை பொருட்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் சொத்து முடக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:போதை பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!
மேலும் போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கையில் அதிகாரிகள் ஏதேனும் தவறிழைத்தால் நான் சர்வாதிகரியாக மாறுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான 9 கிலோ கோகைன் மற்றும் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.