rowdy murdered in vysarpadi
பிரபல ரவுடியை மர்மநபர்கள், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் தியாகு (எ) தியாகராஜன் (32). பிரபல ரவுடி. இவர் மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி, கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரது நண்பர் வியாசர்பாடியை சேர்ந்த ராஜசேகர். முல்லை நகர் இணைப்பு, சத்தியமூர்த்தி நகர் சாலையில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். இங்கு தியாகு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை தியாகு, ராஜசேகரை சந்திக்க முல்லை நகரில் உள்ள அவரது டிரைவிங் ஸ்கூலுக்கு சென்றார். அங்கு தனது நண்பர் ஒருவருக்கு டிரைவிங் லைசன்ஸ் எடுத்து தரவேண்டும் என கேட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து ராஜசேகர், டீ வாங்குவதற்காக சாலையை கடந்து, எதிரில் உள்ள டீக்கடைக்கு சென்றார். தியாகு தனியாக இருந்தார்.
அப்போது, 3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல், திபுதிபுவென மாடிக்கு சென்று, டிரைவிங் ஸ்கூலில் நுழைந்தது. அவர்களை கண்டதும், தியாகு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் மர்மநபர்கள், அவரை சுற்றி வளைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில், அலறி துடித்த தியாகு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தியாகு இறந்ததை உறுதி செய்த மர்மநபர்கள், அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.
இதை எதிர் திசையில் உள்ள டீக்கடையில் இருந்து பார்த்த ராஜசேகர் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து எம்கேபி நகர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு மாதவரம் பகுதியை சேர்ந்த போத்திஸ் முரளி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தியாகுவும் ஒரு குற்றவாளி. இதனால், அவரது கூட்டாளிகள் பழிக்கு பழி வாங்குவதற்காக இந்த கொலை நடந்ததா அல்லது பல்வேறு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தியாகு மீது முன் விரோதம் காரணமாக வேறு யாராவது கொலை செய்தார்களா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.
