இரயில்வே மேம்பால பகுதியில் தடுப்பு சுவர் கேட்டு மக்கள் ஆட்சியரிடத்தில் கோரிக்கை மனு...
தருமபுரி
தருமபுரியில், சிந்தல்பாடி இரயில்வே மேம்பால பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும் அங்கு பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் மக்கள் ஆட்சியரிடத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மலர்விழி தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப்பெட்டி, பசுமைவீடுகள், பட்டா மற்றும் சிட்டா, வாரிசு சான்றிதழ், சாலைவசதி, பஸ்வசதி, குழந்தைகள் நல மையம், முதியோர் ஓய்வூதியத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 385 கோரிக்கை மனுக்களை மக்கள் அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஏ.கொல்லஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொட்டாய்மேடு பகுதியைச் சேர்ந்த மக்கள் தரப்பில் கொடுத்த கோரிக்கை மனுவில், "எங்கள் பகுதியில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள இடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம்.
இந்த நிலையில் இடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். எனவே, வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி இந்த பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரினர்
அதேபோன்று, சிந்தல்பாடிபகுதியை சேர்ந்த மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், "சிந்தல்பாடியில் இடிக்கப்பட்ட இரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தார் சாலைக்கு கீழ் பகுதியில் 10 அடி ஆழ பள்ளங்கள் உள்ளன. இங்கு விபத்து அபாயத்தை தடுக்க பக்கவாட்டு சுவர்கள் அமைக்க வேண்டும்.
இந்த சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். இரயில் நிலையத்திற்கு பெயர் பலகை வைக்க வேண்டும்" என்று கோரினர்.
மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய ஆட்சியர் மலர்விழி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி ஒரு வார காலத்திற்குள் பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்க் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, தனித்துணை ஆட்சியர் முத்தையன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன்,
மாவட்டஆதிதிராடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் அலுவலர்கள், மக்கள் பங்கேற்றனர்.