அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார் கொடுத்தவர்களே, ஆக்கிரமிப்புகளை அகற்றவந்த அதிகாரிகளிடம் “திடீரென வீடுகளை அகற்றினால் சம்பந்தப்பட்டவர்கள் எங்கு செல்வார்கள்?” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் உள்ள மாதம்பட்டு சாலைப் பகுதியை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இதனால் அங்கு அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்ததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்த திருக்கோவிலூர் தாசில்தார் நளினியிடம் அளித்த புகாரின் பேரில் அவரது தலைமையில் நெடுஞ்சாலைத்துறை இளநிலை செயற்பொறியாளர் இளஞ்செழியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிளஅளவீடு செய்தனர்.

பின்னர் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் புகார் அளித்த கிராம மக்களும் ஒன்றாக வந்து சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்கள், திடீரென வீடுகளை அகற்றினால் சம்பந்தப்பட்டவர்கள் எங்கு செல்வார்கள். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்வதற்கு அவர்களுக்கு கால அவகாசம் வழங்குவதோடு, இலவசமாக மாற்று இடமும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டனர்.

இதனையடுத்து அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று இடம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே 6 மாத காலத்துக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அதற்கு கிராம மக்களும், ஆக்கிரமிப்பாளர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க திருவெண்ணெய்நல்லூர் காவலாளர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.