ரூ.8 கோடி மதிப்புள்ள செம்மரக் கடத்தலில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு; விரைவில் விசாரணை…
தூத்துக்குடியில் ரூ.8 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பதுக்கி வைத்திருந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர், இதில் அதிமுக பிரமுகருக்கும் தொடர்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். அவரிடம் விரைவில் விசாரணை நடக்கும் என்று வனத்துறையினர் கூறினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் அருகே சோரீசுபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான கிடங்கு ஒன்று உள்ளது.
இதில், கொள்கலனில் (கன்டெய்னர்) பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் செம்மரக் கட்டைகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.8 கோடி.
காவலாளர்களால் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிந்த வனத் துறையினர் தூத்துக்குடியைச் சேர்ந்த ஐயப்பன், வெற்றிவேல், பாலசுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், இந்த கடத்தலில் தூத்துக்குடி ஜார்ஜ் சாலையைச் சேர்ந்த அசாரூதினுக்கு (29) தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசாருதீனை வனத் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பின்னர், அவரை தூத்துக்குடி இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒப்படைத்தனர்.
கைதான அசாருதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட இருவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களிடமும் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் அனைத்தும் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள அரசு கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகவும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.