தேனியில் மது போதையில் இருந்த நான்கு இளைஞர்கள், வியாபாரிகளிடம் தகராறில் ஈடுபட்டு பள்ளி மாணவிகளுக்கு இடையூறு செய்தனர். பொதுமக்கள் இருவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் பொதுமக்களை மிரட்டும் வீடியோ வைரல்.

தேனி நகரில் முக்கிய பகுதியான பகவதி அம்மன் கோயில் தெரு பகுதியில் ஏராளமான ஜவுளிக்கடை, பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாகும். இங்கு மது போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் தகராறில் ஈடுபட்டும் பள்ளி மாணவிகள் பின்னே சென்று ஆபாசமாக பேசி இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். ஆனால் இரண்டு இளைஞர்கள் தப்பியோடிய நிலையில் இரண்டு இளைஞர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அரண்மனைபுதூர் பகுதியை சேர்ந்த பரஞ்சோதி(21), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்றும் மேலும் தப்பியோடிய இரண்டு சிறார்கள் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டனர். இளைஞர்கள் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்த பொது மக்களை இளைஞர்கள் மிரட்டல் விடுத்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.