வழக்கு தொடுத்துத்தான் பாரேன்…!!! – பொன்னுசாமிக்கு ராஜேந்திர பாலாஜி சவால்…
பால் முகவர்கள் சங்கம் அவதூறு வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்கத் தயார் எனவும், தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதெரிவித்துள்ளார்.
தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்வதாகவும், தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதாகவும், கூறி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி வந்தார்.
மேலும் தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் இல்லை என நிருபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் பேட்டி அளித்து வந்தார்.
இதைதொடர்ந்து, பால் கலப்படம் தொடர்பான வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தமிழகம் முழுவதும் சுமார் 886பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததாகவும், அதில் 187பால் மாதிரிகள் மட்டும் தரம் குறைந்து காணப்பட்டதாகவும், எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிரூபணமாகவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
எனவே பொறுப்பின்றி செயல்பட்ட டி.ராஜேந்திர பாலாஜியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக பதவிவிலக வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர் சங்கத்தின் பொன்னுசாமி கூறி வந்தார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, என்னை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லும் பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுச்சாமி என்பவர் பால் முகவரே அல்ல எனவும், அவரது சங்கம் ஒரு டூப்ளிகேட் சங்கம் எனவும் தெரிவித்தார்.
இதற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனடியாக தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் எனவும், இல்லையெனில் சட்டரீதியாக மான நஷ்ட வழக்கு தொடருவேன் எனவும் பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுச்சாமி எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் பால் முகவர்கள் சங்கம் அவதூறு வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்கத் தயார் எனவும், தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதெரிவித்துள்ளார்.