rain in chennai...rain in all night

ராத்திரி முழுசும் கொட்டோ கொட்டுனு கொட்டிய மழை !! மிதக்கத் தொடங்கியது சென்னை!! போக்குவரத்து பாதிப்பு !!!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் நேற்று இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விடாமல் மழை கொட்டி வருவதால் மீண்டும் ஒரு வெள்ளத்தை இந்த மாநகரம் சந்திக்க வேண்டி வருமோ என சென்னை மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 27-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங் கியதாலும், வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.



இந்த நிலையில், நேற்று மழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

சென்னை நகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. பிற்பகலில் சற்று ஓய்ந்து இருந்த மழை மாலையில் வெளுத்து வாங்கியது. இரவிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் முழுங்கால் அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்டடுள்ளது.

அண்டர்கிரவுண்ட் பாலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஏராளமான வாகனங்கள் அதில் சிக்கியுள்ளன. இரு சக்கரவாகனங்களும் ஆங்காங்கே பழுதடைந்து நிற்கின்றன.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம்போல் சென்னை மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்திக்க வேண்டி வருமோ என பொது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.