weather update: மறுபடியும் முதல இருந்தா..! அப்டேட் கொடுத்த வானிலை மையம்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையொட்டி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த பகுதிகளால், பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. சென்னை மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகள் மழைவெள்ளத்தில் தத்தளித்தன. நவம்பர் மாதத்தில் மட்டும் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
16.12.2021 முதல் 19.12.2021 வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 17 ஆம் தேதி தென் மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நிலநடுக்கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடகிழக்கு காற்றின் வேகம் மணிக்கு 50 கிமீ வரை வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.