தூத்துக்குடியில் குவியும் இரயில்வே காவலர்கள்; பாதுகாப்பு நடவடிக்கைக்காக அழைத்து செல்கிறார்களாம்...
திருச்சி
தூத்துக்குடிக்கு பாதுகாப்பு தேவைப்படுதால் அப்பணிக்காக திருச்சியில் இருந்து 54 இரயில்வே காவலாளர்கள் அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவலாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தி இதுவரை 13 பேரை கொன்றுள்ளனர்.
தூத்துக்குடியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான காவலாளர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக இரயில்வே காவலாளர்களை அனுப்ப காவல் உயரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதனையடுத்து சென்னையில் இருந்து வைகை விரைவு இரயிலில் 54 இரயில்வே காவலாளர்கள் நேற்று புறப்பட்டு திருச்சி வந்தனர். திருச்சியில் இருந்து நேற்று இரவில் காவல் வேன்கள் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக திருச்சி சந்திப்பு இரயில்வே காவல் நிலையம் முன்பு 54 இரயில்வே காவலாளர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார்.