இரண்டரை லட்சம் ரேஷன் கார்டுகள் முடக்கம் - உணவு பொருட்கள் வாங்க முடியாமல் பொது மக்கள் திணறல்……
ஆதார் எண்களை பதிவு செய்யாத 2 லட்சத்து 42 ஆயிரம் ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதால் அந்த கார்டுகளுக்கான உணவு பொருட்கள் வாங்க முடியாமலும், ஆதார் பதிய முடியாமலும், அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் பெறப்பட்டன.
தற்போது கடந்த 1 ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், 2.42 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கூட பதிய வில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது,
இதனால்,ஆதார் எண்ணை பதிவு செய்யாத அவர்களின் ரேஷன் கார்டுகளை உணவுத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
கவனக்குறைவு மற்றும் வெளியூர் சென்றது, அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ரேஷனில் ஆதார் எண்ணை லட்சக்கணக்கானோர் பதிவு செய்யமல் விட்டுவிட்டனர்.
தற்போது தமிழகம் முழுவதும் முடக்கப்பட்ட, 2 லட்சத்து 42 ஆயிரம் கார்டுகளில் சென்னையில் மட்டும்1 லட்சத்து 7 ஆயிரம் கார்டுகள் உள்ளன. இதைதொடர்ந்து, காஞ்சிபுரத்தில் 43 ஆயிரம் கார்டுகளும்; திருவள்ளூர் மாவட்டத்தில் 27 ஆயிரம் கார்டுகளும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 ஆயிரம் கார்டுகளும் திருநெல்வேலியில் 5000 கார்டுகளும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.