வாடிக்கையாளர் பணத்தை வங்கியில் போடாமல், தனது பாக்கெட்டுக்குள் போட்ட வங்கி காசாளருக்கு 2 ஆண்டு சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…
ஜெயங்கொண்டம்
வங்கியின் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை வங்கி பதிவேட்டில் வரவு வைக்காமல் 18 பேரிடம் கையாடல் செய்த காசாளருக்கு 2 ஆண்டு சிறை வித்த்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் இடையாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (48). இவர் கடந்த 2005-ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டச் சோழபுரத்தில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக பணிபுரிந்தார்.
அப்போது வங்கியின் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை பதிவேட்டில் வரவு வைக்காமல் சேமிப்பு கணக்கு புத்தகத்தில் மட்டும் வரவு வைத்தார். இதுபோன்று 18 வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் கையாடல் செய்துள்ளார். இதை கணக்கு தணிக்கையின்போது அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது குறித்து அப்போதைய வங்கி மேலாளர் குணசேகரன் பெரம்பலூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பான வழக்கு ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு சேகரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மதிவாணன், வங்கியில் பணம் கையாடல் செய்த சேகருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.