பல கோடி ரூபாய் போட்டு கட்டிடத்தை கட்டியது பூட்டி வைக்கவா? சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…
காட்பாடி
காட்பாடி காந்தி நகரில் உள்ள சட்டக்கல்லூரி வளாகத்தில் பல கோடி ரூபாய் போட்டு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தைத் திறக்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
காட்பாடி காந்தி நகரில் சட்டக்கல்லூரி ஒன்று உள்ளது. இக்கல்லூரி வளாகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதியக் கட்டிடத்தை திறக்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் கேட்டபோது, ‘‘இந்த சட்டக்கல்லூரியில் சுமார் 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டும் பணி கடந்த 2012–ஆம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு முடிவடைந்தது.
பழைய கட்டிடத்தில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான போதிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, இந்த புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடம் பலமுறை மாணவ, மாணவிகள் கோரிக்கை அளித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து கடந்த 2–ஆம் தேதி தமிழக முதலமைச்சருக்கு மாணவர்கள் சார்பில் கடிதமும் அனுப்பிவுள்ளனர். அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, புதிய கட்டிடத்தை திறக்கும் வரை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’’ என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி பேராசிரியர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், மாணவர்கள் “புதிய கட்டிடத்தை திறப்பதை தவிர வேறு கோரிக்கை இல்லை” என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டனர்.
அதனால், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.