Pullur dam fil and water overflow

வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திரா பாலாற்று பகுதியில் 12அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள புல்லூர் பெரும்பள்ளம் தடுப்பனை நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணை அதன் கொள்ளவைத் தாண்டி நிரம்பி வழிவதால் அப்பகுதி விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கடும் வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் வேலூரில் நேற்று இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ந்த காற்றை மக்கள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

இதே போல் வாணியம்பாடி மற்றும் ஆந்திர மாநில எல்லைப்பகுதிகளிலும் இரவு 8.30 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு 12.30 மணி வரை மழை வெளுத்து வாங்கியது.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவியது.

வாணியம்பாடி மற்றும் ஆந்திர எல்லைப்பகுதியில் பலத்த மழை பெய்யததால், வாணியம்பாடியை அடுத்த புல்லூர் பெரும்பள்ளம் தடுப்பணை நிரம்பியது.

12 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணை தற்போது நிரம்பி வழிவது கண் கொள்ள காட்சியாக இருக்கிறது. இந்த அணை நிரம்பினால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென் மேற்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் தற்போது முதன்முதலாக புல்லூர் பெரும்பள்ளம் தடுப்பணை நிரம்பியுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.