உணவகங்கள், பல்பொருள் அங்காடி, பேக்கரிகளுக்கு வரும் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கணும் – ஆட்சியர் உத்தரவு…
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் உள்ள உணவகங்கள், பல்பொருள் அங்காடி, பேக்கரி ஆகிய இடங்களுக்கு வரும் மக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் என்று ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் பதினைந்துக்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிலும்க் குறிப்பாக அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் நோயாளிகள் மற்றும் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், உணவுப் பாதுகாப்பு ஆணையர் அமுதா, “உணவுப் பண்டங்கள் விற்பனைச் செய்யும் பெரு நிறுவனங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு உள்ளார்.
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திலும் அந்த நடைமுறையை பின்பற்ற மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டு உள்ளார்.
அந்த உத்தரவில், “மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், பல்பொருள் அங்காடி, பேக்கரி ஆகிய இடங்களுக்கு வரும் மக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.