"தனியார் மருத்துவ கல்லூரிகள் 50% சீட்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" - உயர்நீதிமன்றம் அதிரடி
தனியார் மருத்துவ கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை இடங்களில் 50 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்த இப்பிரச்சனையில் அலட்சியம் காட்டிய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எப்படி இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப் படுகிறதோ, அதைப் போல , தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்று அதை ஏழை மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை தமிழக அரசு பின்பற்றவில்லை.
இந்த இடங்களை தனியார் கல்லூரிகள் பல கோடி ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன,
இந்நிலையில் மருத்துவ மேற்படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை கேட்டு பெறவில்லை என்றும், இப்பிரச்சனையில் அலட்சியமாக இருந்த தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி, டாக்டர் காமராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரரித்த நீதிபதி கிருபாகரன், தமிழக அரசு தனியார் கல்லூரிகளிடம் இருந்து ஒதுக்கீட்டு இடங்களை கேட்டு பெறவில்லை எனவும் 2000 ஆம் ஆண்டு முதல் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கேட்டுப் பெறவில்லை என்பதை கண்டித்தும் 1 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
அதே நேரத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகள் தங்களிடம் உள்ள 50 சதவீத இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தவிட்டார்.