ஈரோட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது சாவுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் தான் காரணம் என்று 200 மாணவர்கள் கல்லூரிக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கல்லூரிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

ஈரோடு

ஈரோட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது சாவுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் தான் காரணம் என்று 200 மாணவர்கள் கல்லூரிக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கல்லூரிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஈரோடு மாவட்டம், கொடுமுடி, நடுப்பாளையம் அருகேவுள்ளது சாணார்புதூர். இக்கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், எழுமாத்தூர் பாரதியார் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியியல் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். 

இவருக்கும் கல்லூரி மாணவர்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கல்லூரி நிர்வாகம் தினேஷ்குமாரை 15 நாள்கள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனால் மனமுடைந்த தினேஷ்குமார் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.

தினேஷ்குமாரின் சாவுக்கு கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் தான் காரணம் என்றும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 24–ஆம் தேதி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதுமட்டுமின்றி சாலை மறியலில் ஈடுபட்டு கல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான தங்களது குரலைப் பதிவுச்செய்தனர். இதுகுறித்து அறிந்த காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து அவர்களை சமாதானப்படுத்தினர். \

மாணவர்களும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையிலும் 200 மாணவர்கள் கல்லூரியில் திரண்டனர். 

அவர்கள், "தினேஷ்குமார் சாவுக்கு காரணமான கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முழக்கமிட்டு கல்லூரிக்குள் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுபற்றி அறிந்த மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் சேகர் மற்றும் காவலாளர்கள், மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சிவசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாணவர்களிடம் எம்.எல்.ஏ., "இன்னும் பத்து நாள்களுக்குள் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மீது விசாரணை நடத்தி உண்மை நிலை கண்டறியப்படும். குற்றம் உறுதியானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார். 

இதனையேற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் கல்லூரி வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது.