காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராட்டத்தில் குதித்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்...
திருவாரூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் கணேசன், மாநிலத் துணைத் தலைவர் வரதராஜன், மாநிலத் துணைச் செயலாளர்கள் சண்முகநாதன், இயேசுராசு உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது, "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்" என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அதன்பின்னர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் செய்தியாளர்களிடம், "தமிழகத்தின் நெற்களஞ்சியமாக உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழித்து பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக காவிரி நீர் பிரச் சினையில் கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்பட்டு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
இந்த நிலையில், தேனியில் நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், புதுக்கோட்டையில் ஐட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தில் விவசாய நிலங்களே இருக்காது.
எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.