president not allowed in temple because of caste BJP silence dravidar kalagam Struggle ...

கிருஷ்ணகிரி

ஜனாதிபதியின் சாதியை காரணம் காட்டி கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுத்ததை கண்டித்து கிருஷ்ணகிரியில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. 

"ராஜஸ்தான் மாநிலம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு தனது துணைவியாருடன் வழிபட சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சாதியின் பெயரால் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காததைக் கண்டித்து" இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதற்கு மாவட்டச் செயலாளர் திராவிடமணி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட இணைச் செயலாளர் வனவேந்தன், மாவட்ட துணைத் தலைவர் அறிவரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணித் தலைவர் இல.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் துக்காராம், தர்மபுரி மண்டலத் தலைவர் மதிமணியன், தலைமை கழக சொற்பொழிவாளர்கள் அண்ணாசரவணன், பழ.வெங்கடாஜலம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். 

இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நகர அமைப்பாளர் ராஜா நன்றி தெரிவித்தார்.