ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா காரணம் இல்லையாம்… பொன். ராதா கிருஷ்ணன் திடீர் பல்டி …

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவால், கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் உள்ளது.

இந்தாண்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும், பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டுள்ளதால், பதற்றமும் நிலவுகிறது.

சென்னை, மதுரை, திருச்சி, நாமக்கல், நெல்லை,கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ.மாணவிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டத்தின் வீரியம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களும்,விவசாயப் பெருங்குடி மக்களும்,வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் ஜல்லிக்கட்டு நடத்துவதை அரசு செய்யும் என்று தெரிவித்திருந்தார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையே நீக்க வேண்டும், அதற்கு உடனடியாக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இப்படி அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் போராடிக் கொண்டிருக்க, இதுவரை அவசரச் சட்டம் கொண்டு வந்தாவது ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கூறி வந்த மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திடீரென பல்டி அடித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் கொண்டு வந்தால் அது நிரந்தர தடையில் முடியும் என கூறியுள்ளார். அவசரச் கட்டம் கொண்டு வருவதில் சிக்கல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதைவிட அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றைம் பொன்னார் கூறியுள்ளார். அது என்ன தெரியுமா? ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கு பீட்டா காரணம் இல்லையாம்… தமிழர்களுக்கு எதிராக திரும்பி விட்டாரா பொன்னார் ?