ஸ்டெர்லைட்டுக்கு சட்டவிரோத நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரம்! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விளக்கம் கேட்டு சிப்காட்டுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க அனுமதியை தடை செய்யவேண்டும். தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த 50 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் வசிக்கும் நாடுகளில் முன்னெடுத்துள்ளனர்.
இந்த சூழலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சட்ட விரோதமான முறையில் 324 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து சிப்காட் திட்ட இயக்குநர் விளக்கம் அளிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்
என்றும் அதில் தெரிவித்துள்ளது.