காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி காவல்துறை போராட்டம்; இன்னும் சில கோரிக்கைகளும் இருக்கு...
தூத்துக்குடி
காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தினர் கடந்த 27-ஆம் தேதி முதல் கோரிக்கை அட்டைகள் அணிந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இந்தப் போராட்டத்தில் "தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்,
புதிதாக வழங்கப்பட்ட களப்பணிக்கு இணையான அமைச்சு பணியாளர்கள் வேண்டும்.
கருணை வேலைவாய்ப்பு வேண்டி காத்திருப்போரை பணியமர்த்த வேண்டும்.
அலுவலக உதவியாளர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு உடனே வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.