நெல்லையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற போலீசார் மீது சிறுவர்கள் தாக்குதல் நடத்தியதால், தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Nellai police shooting : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மது மற்றும் போதைப்பொருட்களில் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நெல்லையில் இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதலை தடுக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் முருகனை அரிவாளார் சிறுவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
நெல்லையில் தகராறில் ஈடுபட்ட சிறுவர்கள்
இதனையடுத்து சிறுவன் மீது, தற்காப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சிறுவனுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் அளித்துள்ள விளக்கத்தில், திருநெல்வேலி பாப்பாக்குடி காலனி சமத்துவபுரத்தை பூர்வீகமாக கொண்ட, சண்முகசுந்தரம் என்பவரது மகன் சக்திகுமார். வயது 22 என்பவர். தற்போது ரஸ்தாவூர் ஊரில் குடியிருந்து வருகிறார். திருநெல்வேலி அருகே பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள், சக்திகுமார் என்ற இளைஞரை மிரட்டியுள்ளனர். தாங்கள் செய்த ரவுடித்தனத்தை காவல்துறைக்கு எப்படி தெரிவிக்கலாம் என சக்திகுமாரை 2 சிறுவர்கள் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் சென்றுள்ளனர். அப்போது வன்முறையில் ஈடுபட்ட இளம் சிறார்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது இரண்டு சிறுவர்களும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க முயன்றுள்ளனர்.
17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு
இதில் சிறுவர்கள் தாக்கியதில் தமிழ்நாடு சிறப்பு படை காவல்துறை ரஞ்சித் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக சம்பவ இடத்தின் அருகே இருந்த வீட்டிற்குள் சென்று பதுங்கிய போலீசார் மீது தாக்குதல் நடத்த அந்த கும்பல் வீட்டின் கதவை ஆக்ரோசமாக தாக்கி வெட்டி உள்ளனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்த பெண், அவருடைய குழந்தை மற்றும் காவலர்களை தற்காத்துக் கொள்ள போலீசார் துப்பாக்கி சூடு நடந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இளஞ்சிறார் மீது பாப்பாக்குடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி உள்பட 11 பிரிவுகளின் கீழ் சிறுவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
