ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்...! வாலிபர் கைது...!
சென்னையில் பறக்கும் ரயிலில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அந்த நபரை எழும்பூர் ரயில்வே துறை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதேபோல உத்தரபிரதேசத்ல் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால் மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகள் அனுபவித்து வரும் நிலையில், பாலியல் குற்றங்களைத் தடுக்கக்கோரி குரல்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வு செய்தால் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான சட்டத்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்ட அந்த நாளின்போதே 10 சிறுமிகளுக்கு பாடிலயல் கொடுமை இழைக்கப்பட்டது. திரிபுரா மாநிலத்தில் 14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக, விஸ்வ ஹிந்து பரிசத்தின் துணை அமைப்பான அகில் பாரத் அகண்ட விகாஷ் தலைவர் மனோஜ் கோஷ் (58) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ரயிலில் சென்ற இளம் பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சுமார் 11 மணியளவில் வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பறக்கும் ரயிலில் இளம் பெண் ஒருவர் பயணமாகியுள்ளார். அப்போது பெண்கள் பெட்டியில் சத்யராஜ் என்ற வாலிபர் ஏறியுள்ளார். பின்னர், தனியாக இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக சத்யராஜ் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பயந்து போன அந்த இளம் பெண், கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் கூச்சலைக் கேட்டு வந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சிவாஜி, அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார். மேலும் சத்யராஜை பிடித்து, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, சத்யராஜ் கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.