+2 தேர்வில் தோல்வி பயம் - ரிசல்ட் வரும் முன்பே மாணவி தூக்கிட்டு தற்கொலை...
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்று பயந்து மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2017-க்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 2ல் தொடங்கி 31 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தாராபுரத்தை சேர்ந்த மாணவி நிவேதா ரிசல்ட் வரும் முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் நிவேதா.
12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்து உள்ளார்.
மேலும், இவர் பத்தாம் வகுப்பில் 451 மதிப்பெண்கள் பெற்று நல்ல முறையில் தேர்ச்சி பெற்றார்.
இந்நிலையில், 12 வகுப்பு தேர்வு சரியாக எழுதவில்லை என மிகவும் கவலையில் இருந்து வந்துள்ளார்.
இதைதொடர்ந்து இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் முன்பே வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளியே சென்று திரும்பிய உறவினர்கள் நிவேதா இறந்திருப்பதை கண்டு கதறி அழுதனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.