அங்கன்வாடி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் - ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டத்தில் தீர்மானம்...
திருவாரூர்
அங்கன்வாடி, டாஸ்மாக் போன்ற துறைகளில் உள்ள காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று திருவாரூரில் நடந்த ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டக் குழுக் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சந்திரசேகரஆசாத் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவபுண்ணியம் இதில் பங்கேற்று பேசினார்.
இந்தக் கூட்டத்தில், "ரேசனில் அத்தியாவசியப் பொருட்கள் குறைக்கப்படாமல் மக்களின் தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கன்வாடி, டாஸ்மாக் போன்ற துறைகளில் மதிப்பூதியம், தொகுப்பூதியம் முறைகளை கைவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
முறைசாரா தொழிலாளர் நல வாரிய பணப்பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும்.
அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 9-ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்வது" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட நிர்வாகிகள் கவுதமன், கலைச்செல்வன், காந்தி, சின்னத்தம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.