Perarivalan Letter to the Chief Minister

செய்யாத குற்றத்திற்கு இளமையை தொலைத்து விட்டு இருண்ட சிறையில் முடங்கிக் கிடந்தேன், தற்காலிக சுதந்திர காற்றை நிரந்தரமாக சுவாசிக்க நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரறிவாளன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதில், தாங்கள் எனக்கு வழங்கியுள்ள 30 நாட்கள் விடுப்பு எனும் வரலாற்று சிறப்புமிக்க முடிவானது 26 ஆண்டுகால கண்ணீரும், வலியும் நிறைந்த ஒரு தாயின் நீதிக்கான போராட்டத்தை சற்றேனும் ஆற்றுப்படுத்தும். எங்கள் விடுதலையை நோக்கிய நீண்ட துயர்மிகுந்த பயணத்தின் நம்பிக்கையூட்டும் துவக்க புள்ளியாகும்.

எனது தாயின் கண்ணீரை துடைக்கவும், ஆறுதல் சொல்லவும் வாய்ப்பளித்துள்ளீர்கள். எனது தந்தைக்கு மருத்துவம் பார்க்கும் வாய்ப்பை தந்திருக்கிறீர்கள். 

நீண்ட கால சிறைவாசத்தால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள எனது உடல் நனை பார்த்துக் கொள்ளவும், உரிய சிறப்பு மருத்துவர்களை அழைத்து ஆலோசனை பெறவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

செய்யாத குற்றத்துக்காக இளமையை தொலைத்துவிட்டு இருண்ட சிறையில் முடங்கிக் கிடந்த எனக்கு எனது வீட்டின் முற்றத்தில் அமர்ந்து, உறவுகளோடு பேசும் மகிழ்ச்சியை தந்திருக்கிறீர்கள்.

எனது குடும்பத்தாரின் சார்பிலும், தங்களுக்கும் தங்கள் தலைமையிலான அரசுக்கும் நன்றி சொல்ல வேண்டியது எனது கடமையாகும். 

தற்காலிகமான இந்த சுதந்திரக்காற்றை நிரந்தரமாக சுவாசிக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும், தாங்கள் மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கிறோம். நிரந்தர விடுதலைக்கும் தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலோடு நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் பேரறிவாளன் கூறியுள்ளார்.