குடிநீர் கேட்டு தாசில்தாரின் வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள் - ஊராட்சி செயலரை மாற்றவும் கோரிக்கை...
நாமக்கல்
நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள், அந்த வழியாக வந்த தாசில்தாரின் வாகனத்தை முற்றுகையிட்டு சீரான குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி செயலாளரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள பொம்மசமுத்திரம் ஊராட்சித்தில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சனை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் சென்று குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தனர்.
இருந்தும் பொம்மசமுத்திரம் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து குடிநீர் விநியோகம் செய்யும் ஆபரேட்டரை சந்தித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஊராட்சி செயலாளர் அனுமதி கொடுத்தால்தான் தண்ணீர் விநியோகம் செய்ய முடியும் என்று கூறியுள்ளனர்.
இதனால் சினம் அடைந்த மக்கள் பொம்மசமுத்திரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள், குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி செயலாளர் சிவக்குமாரை மாற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் அந்தப் பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே கொல்லிமலை தாலுகா அலுவலகத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் பச்சமுத்து அவ்வழியே காரில் வந்தார். இதைப் பார்த்த மக்கள், அவருடைய வாகனத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சேந்தமங்கலம் தாசில்தார் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், இளங்கோவன், காவல் ஆய்வாளர் பொன் செல்வராஜ், சேந்தமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மேலும, , ஊராட்சி செயலாளரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு எழுதி அதனை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசிடம் மக்கள் கொடுத்தனர். அதனைப் பெற்றுக்கொண்ட சிவபிரகாசம், ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அந்த மனுவில், கையெழுத்திட்டார்.
அந்த மனுவை ஊராட்சி மன்ற அலுவலக சுவரில் மக்கள் ஒட்டியதைத் தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.