வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக அகழி அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை...
நீலகிரி
வன விலங்குகளுக்கு குடிநீர்த் தேவைக்காக அகழி அமைக்க வேண்டும் என்று மஞ்சூர் வனப் பகுதிகளில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு எதிர்பார்த்த மழை பொழியவில்லை என்பதால் ஏரி, குளம், குட்டை, அணை, ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் வனப் பகுதிகள் காய்ந்துவிட்டன. இதனால், உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி, குரங்கு, காட்டு ஆடு, வரையாடு உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தைவிட்டு வெளியே வருகின்றன.
வன விலங்குகள் தேயிலைத் தோட்டம், விளைநிலம், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்த பல்வேறு சேதங்களை ஏற்படுத்துகின்றன. இச்சமயங்களில் சிலர் வன விலங்குகளை மாமிசத்திற்காக வேட்டையாடுகின்றனர். வன விலங்குகளின் பல், நகம், முடி, கொம்புகள் உள்ளிட்டவற்றை கள்ளச் சந்தையில் விற்பைனை செய்து வருகின்றனர்.
இவற்றில் இருந்தெல்லாம் தப்பித்துவிட்டாலும் விளை நிலங்களை நோக்கி ஊருக்குள் வரும்போது சாலைகளில் வரும் வாகனங்களில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன
எனவே, மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள வனப் பகுதியில் வன விலங்குகளுக்கு குடிநீர்த் தேவைக்காக அகழி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.