நள்ளிரவு மயானத்தில் பந்தல் அமைத்து குடியேறிய குறவன் இன மக்கள்... எதுக்கு இப்படி போராடுறாங்க?
வேலூர்
வேலூரில், சாதி சான்றிதழ் கேட்டு குறவன் இன மக்கள் நள்ளிரவு மயானத்தில் பந்தல் அமைத்து குடியேறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தமிழ்நாடு குறவன் பழங்குடியின மக்கள் முன்னேற்ற சங்கத்தினர், எஸ்.சி சாதி சான்றிதழ் கேட்டு வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 144 பேரை காவலாளர்கள் நேற்று முன்தினம் கைது செய்து, திருப்பத்தூரில் உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
அங்கு அவர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவலாளர்கள் சமாதானம் செய்தும் அவர்கள் பட்டினி போராட்டத்தை கைவிடவில்லை. அதில் ஒருசிலர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால், மருத்துவ குழுவினர் மற்றும் 108 அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டது. மேலும், அசம்பாவிதம் எதுவும் ஏற்பட கூடாது என காவலாளர்கள் அவர்களை விடுவித்தனர்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி பிரதான சாலையில் பெரியார்நகர் பகுதியில் உள்ள மயானத்தில் நள்ளிரவு பந்தல் அமைத்து குடியேறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, அவர்களை பேச்சுவார்த்தைக்கு திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு திருப்பத்தூர் உதவி ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., தாசில்தார் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்ததை நடந்தது.
அப்போது அதிகாரிகள் தரப்பில், "பத்து நாட்களில் சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.