சாராயக் கடையை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்... ஊர்வலமாக சென்று முற்றுகையிட முயன்றதால் பதற்றம்...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக் கோரி ஊர்வலமாக சென்று முற்றுகையிட முயன்ற மக்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே கொழுவனூரில் ஆவுடையார்கோவில் - மீமிசல் சாலையில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று உள்ளது.
இந்த டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக்கோரி நேற்று வேள்வரை ஊராட்சி மக்கள், டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்தனர். இவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் முருகேஷ் தலைமைத் தாங்கினார்.
இதில், பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்வம், மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முபாரக்அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பல்வேறு கட்சியினரும் பங்கேற்றனர்.
டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட ஊர்வலமாக வந்தவர்களை மீமிசல் காவலாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால். முற்றுகையிட சென்றவர்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆவுடையார்கோவில் - மீமிசல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டாஸ்மாக் தாசில்தார் சார்லஸ், கோட்ட கலால் அதிகாரி பரணி, ஆவுடையார்கோவில் தாசில்தார் (பொறுப்பு) கிருஷ்ணவேணி, துணை தாசில்தார் ஜபருல்லா, கோட்டைப்பட்டினம் துணை காவல் கண்காணிப்பாளர் காமராஜ், மீமிசல் காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் இதுதொடர்பான சமாதான கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.