சாராயக் கடையை அகற்றக்கோரி 17–வது நாளாக போராடும் மக்கள்; இன்னும் நடவடிக்கை எடுக்கல…
சிவகங்கை
காரைக்குடியில் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக்கோரி 17–வது நாளாக போராட்டம் நடத்தியும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
காரைக்குடி அருகே உள்ளது மித்ராவயல் கிராமம். இங்குள்ள டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, மாதர் சங்கம், கிராம பெண்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் சாராயக் கடை முன்பு அமர்ந்து கடந்த மாதம் 20–ஆம் தேதியில் தொடர்ந்த போராட்டம் கடந்த 17 நாள்களாக தொடர்ந்து நடந்து வருகின்றது.
சாராய பாட்டில்களுக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி பாடல்களை பாடியும், உண்ணாவிரத போராட்டம், பாடை கட்டியும், நெற்றியில் நாமம் இட்டும் பல்வேறு விதமாக தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் 2 வாரங்களுக்கு மேலாக மக்கள் போராடியும், டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று 17–வது நாளாக மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போது கடை முன்பு சமையல் செய்து சாப்பிட்ட அவர்கள், டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு ஒன்றியச் செயலாளர் பாண்டித்துரை, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராடும் மக்கள் கூறியது:
“மித்ராவயலில் உள்ள இந்த டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றிக் கோரித் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், இதுவரையில் எந்தவொரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. சாராயக் கடையை அகற்றும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” என்றுத் தெரிவித்தனர்.