குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதித்ததால் பதட்டம்...
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதட்டம் நிலவியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா நாட்ராம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேசுராஜபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
இதனைக் கண்டித்து அஞ்செட்டி சாலையில் வெற்றுக் குடங்களுடன் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆண்களும், பெண்களும் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தளி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணி அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், "அந்த பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.