மெட்ரோ பணிகளால் தொடரும் துயரம் - பூமிக்கடியில் இருந்து ரசாயன கலவை பொங்கி வருவதால் பொதுமக்கள் பீதி!!
சென்னை ராயபுரத்தில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் உள்ள வீடுகளில் இன்று காலை திடீரென சிமிண்ட் மற்றும் ரசாயன கலவை நுரை பொங்கி வந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது.
இதில், பழைய வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் பகுதியிலிருந்து தண்டையார்பேட்டை வரையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது..
இந்நிலையில், இன்று சென்னை ராயபுரம் மேற்கு கல்லறை சாலை பகுதியில் உள்ள வீடுகளில் பூமிக்கடியிலிருந்து ரசாயன கலவை நுரை திடீரென பொங்கி வரத் தொடங்கியுள்ளது.
திடீரென வீடுகளுக்குள் ரசாயன கலவை பொங்கி வந்ததால் பீதியடைந்த பொது மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர்.
அந்த கலவையில் இருந்தது துர் நாற்றம் அடிப்பதால் பலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ரசாயன கலவை வீடுகளுக்குள் இருந்து வீதிகளில் வெளியேறி வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மெட்ரோ பணியாளர்கள் தெருக்களில் வந்த ரசாயன கலவை நுரையை அகற்றும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.