மாசு கலந்த தண்ணீரால் காய்ச்சலில் பாதித்த மக்கள்; நல்ல குடிநீர் கேட்டு போரட்டம்…
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளியில் மாசு கலந்த தண்ணீரைக் குடித்து காய்ச்சலில் பாதித்த மக்கள், நல்ல குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே கே.கொத்தூர் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது.
குறிப்பாக இந்த மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் தண்ணீர் வழங்கப்படாததால் கடும் சிரமத்தில் தவிக்கின்றனர் இப்பகுதி மக்கள். இதனால் கே.கொத்தூர் பகுதி மக்கள் குடிநீருக்காக தினமும் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று அங்குள்ள ஏரியில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏரியில் இருந்து எடுத்து வரும் நீர் மாசு கலந்து இருப்பதால் கிராம மக்கள் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனால் நல்ல குடிநீர் கேட்டு நேற்று காலை அந்த பகுதியைச் மக்கள் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் இராமச்சந்திரன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி செய்து தருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.