பரிசல்களை இயக்காமல் திடிரன போராட்டத்தில் இறங்கிய ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள்...
தருமபுரி
தருமபுரியில் பரிசல்களை இயக்காமல் திடிரென போராட்டத்தி ஈடுபட்டுள்ளனர் ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்வது வழக்கம். அதுமட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்து காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசிப்பர்.
ஆனால், எல்லா நாட்களும் பரிசல் இயக்கப்படாது. கர்நாடக மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்த சமயங்களில் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துவிடும்.
அதன்படி, கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7500 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 3500 கன அடியாக வருகிறது. நீர்வரத்து குறைந்துள்ளதால் நான்கு நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், பரிசல்களை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் நேற்று திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள், "ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தண்ணீரின் அளவை பொறுத்து மாமரத்துகடவு பரிசல் துறை, ஊட்டமலை பரிசல் துறை, கோத்திக்கல் பரிசல் துறை ஆகிய மூன்று வழிகளில் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும்.
பரிசல் பயணத்தின்போது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு உடை அதிக அளவில் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் மொத்தம் 420 பரிசல் ஓட்டிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரிசல்கள் காவிரி கரையோரத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.