கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பானிபூரி கடை ஊழியர்! சில்லறைத் தகராறால் விபரீதம்!
சில்லறைத் தகராறில் வாடிக்கையாளர் மீது பானிபூரி கடை ஊழியர் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் கோவையில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் சூலூர் மதியழகன் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் தீபக், திலீப், டேவிட், சேவியர். இவர்கள் நான்கு பேரும் நேற்று (ஞாயிறு) இரவு அதே பகுதியில், சாலையோரத்தில் உள்ள பானி பூரி கடைக்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் காளான் உள்ளிட்டவை சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்துள்ளனர். அப்போது, பானிபூரி கடைக்காரருக்கும், இளைஞர்களுக்கும் இடையே
சில்லறை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது தள்ளுவண்டி கடையின் ஊழியர் கணேசன், இளைஞர்கள் நான்கு பேர் மீதும் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார்.
கொதிக்கும் எண்ணெய் 4 பேர் மீதும் பட்டதில் அவர்கள் அலறித் துடித்தனர். காயமடைந்த அவர்கள் நான்கு பேரையும், அருகிலிருந்தோர் உடனடியாக மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில்லரைத் தகராறில் இளைஞர்கள் மீது கொதிக்கும் எண்ணெய் கொட்டிய சம்பவத்தை அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பை ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய் கொட்டப்பட்டது. இந்த நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் கோவையில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.