Only Rs 2 a kg of straw Minister of ulartivana station opened
விருதுநகர்
திருவில்லிபுத்தூரில் கால்நடை பராமரிப்புத்துறைச் சார்பில் அமைக்கப்பட்ட உலர்தீவன விற்பனை நிலையத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். இங்கு, ஒரு கிலோ வைக்கோல் ரூ.2 மட்டுமே.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதினால், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கால்நடை வளர்ப்போருக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய ஒன்பது தாலுகாக்களில் தலா ரூ.18.27 இலட்சம் மதிப்பில் கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர்தீவனம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக திருவில்லிபுத்தூர் கால்நடை மருந்துவமனையில் உலர்தீவன விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தில் ஒரு கிலோ வைக்கோல் ரூ.2–க்கு விற்பனை செய்யப்படும். ஒரு விவசாயி ஐந்து கால்நடைகளுக்கு ஒரு வாரத்திற்கு 105 கிலோ வரை உலர் தீவனம் பெற்றுக் கொள்ளலாம்.
விற்பனைக்கான உலர் தீவனங்கள் ஆட்சியர் மூலம் அமைக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு கொள்முதல் செய்யப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கால்நடை மருத்துவமனைகளில் பதிவு செய்து பயனடையலாம்.
மீதமுள்ள 8 தாலுகாக்களிலும் உலர்தீவன விற்பனை நிலையங்கள் விரைந்து அமைக்கப்பட்டு செயல்படவுள்ளன.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் விருதுநகர் எம்.பி., டி.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், திருவில்லிபுத்தூர் எம்.சந்திரபிரபா, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) சுகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
