வைரலாகப் பரவும் வங்கியில் முதியவர் கதறி அழுத படம் மோடியின் ரூபாய் நோட்டு விவகாரத்தின் எதிரொலி
வைரலாகப் பரவும் வங்கியில் முதியவர் கதறி அழுத படம்
மோடியின் ரூபாய் நோட்டு விவகாரத்தின் எதிரொலி
புதுடெல்லி, டிச. 15-
பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தால், ஏழை மக்கள், நடுத்தர மக்கள் நாளுக்கு நாள் பல்வேறு விதமான துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி 37 நாட்கள் ஆன பின்னும், மக்களிடம் பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. வங்கிகள், ஏ.டி.எம்.கள் முன், நீண்ட வரிசையில் மக்கள் பணத்துக்காக நிற்கும் கொடுமை தொடர்ந்து வருகிறது.
மக்கள் 50 நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி மிகவும் எளிதாக தெரிவித்துவிட்டுச் சென்ற போதிலும், மக்களின் துயரம் வார்த்தைகளில் சொல்லிமாளாது.
தங்களின் சேமிப்பை அவசரத் தேவைக்கு எடுக்க முடியாமல், மருத்துவம், திருமணச் செலவுக்கு எடுக்கமுடியாமல் திணறி வருகின்றனர். இதில் வங்கிகள், ஏ.டி.எம்.கள் முன் காத்திருக்கும் முதியர்களின் நிலை மிகக்கொடுமை. வயதான காலத்தில் ஓய்வு ஊதியத்தை வாங்குவதற்காக கால்கடுக்க வரிசையில் நின்று பெற்று வருகின்றனர்.
இப்படி வரிசையில் நிற்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் நாடுமுழுவதும் 100 பேரைத் தாண்டிவிட்டது.
இந்நிலையில், டெல்லியின் வடபகுதியில் உள்ள குர்காவன் பகுதியில் நேற்று ஒரு வங்கியில் பணம் எடுக்க ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் நின்று இருந்தனர். அப்போது வரிசையில் நின்று இருந்த முதியவர் ஒருவர் தனக்கு கால் வலித்ததால், சற்று ஓய்வு எடுத்துவிட்டு வருவதற்காக ஓரமாக அமர்ந்து இருந்தார்.
சிறிதுநேரத்துக்கு பின், அந்தவரிசையில் நிற்க முற்படும் போது, யாரும் அந்த முதியவருக்கு இடம் தரவில்லை. அந்த முதியவரின் இடத்தையும் வரிசையில் நின்றவர்கள் அபகரித்துக்கொண்டனர். தனது முதுமையாலும், இயலாமையாலும், வரிசையில் நின்றவர்களை எதிர்க்க முடியாமல், அந்த முதியவர் உடைந்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.
நீண்டநேரம் வரிசையில் நின்று பணம் எடுக்கச் சென்ற போது, வரிசையில் நின்று இருந்த தனது இடத்தை தொலைத்துவிட்டேன் என கூறி
அந்த முதியவர் கதறி அழுதவாறு இருந்தார். இந்த காட்சியை அங்கு இருந்த ஆங்கில நாளேட்டின் புகைப்படக்கலைஞர் ஒருவர் கிளிக் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட வைரலாகப் பரவி வருகிறது.
இப்போதாவது அரசுக்கு தெரிகிறதா, வரிசையில் நிற்பவர்கள் ஏழைகள் மட்டும் தான் என்று...