இனி 20 ரூபாய் நோட்டு டோக்கன் மாயாஜாலம் எப்போதும் எடுபடாது - இப்போதான் புரிந்து கொண்டாராம் அமைச்சர் உதயகுமார்...
மதுரை
ஆர்.கே.நகர் தொகுதியில் கொடுக்கப்பட்ட 20 ரூபாய் நோட்டு டோக்கனை புரிந்து கொண்டதால் இனி அந்த மாயாஜாலம் எப்போதும் எடுபடாது என்று மதுரையில் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் எம்.ஜி.ஆர். 101-வது பிறந்தநாள் விழாவையொட்டி பொதுக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியது: “உரிமைகளுக்காக சண்டை போட்ட நாம், தற்போது இரண்டு அணியினரும் ஒன்று சேர்ந்து கட்சியையும், ஆட்சியையும் நல்ல வழியில் நடத்தி வருகிறோம்.
இந்த நிலையில் ஜெயலலிதாவால் பத்து வருடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு நபர் தற்போது நான் தான் அனைத்தும், என் பின்னால் வாருங்கள் என்றார். அதை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது.
எதிர்கட்சிகள் கூறியபடி பலத்தை நிரூபித்து ஆட்சியை நிலை நிறுத்தி உள்ளோம். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடினோம். ஜெயலலிதாவின் அரசை யாரும் குறை கூறமுடியாதபடி மக்களுக்காக நல்ல திட்டங்களை செய்து வருகிறோம்.
பேருந்து கட்டணம் திடீர் என்று உயர்த்தியதை கேட்கிறார்கள், அரசுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணமில்லை. போக்குவரத்து கழகம் சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறது. அதற்கு நிதி தேவைப்படுகிறது என்பதற்காக பேருந்து கட்டண உயர்வை கொடுத்துள்ளோம். நிதி பற்றாக்குறை காரணமாக எந்த திட்டத்தையும் நாங்கள் நிறுத்தவில்லை.
ஆர்.கே.நகர் தேர்தல், இரட்டை இலை என்னாச்சு என்கின்றனர். எங்களுக்கு ரூ.20 டோக்கன் பற்றி அப்போது தெரியவில்லை. தற்போது புரிந்து கொண்டோம். இனிமேல் 20 ரூபாய் நோட்டு டோக்கன் மாயாஜாலம் இனி எப்போதும் எடுபடாது. மக்கள் அதை முறியடிப்பார்கள்” என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் சுறு சுறு சுப்பையா, பேரவை செயலாளர் தமிழரசன், இலக்கிய அணி செயலாளர் வக்கீல் திருப்பதி,
முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் மருத்துவர் பாவடியான், பேரூராட்சி முன்னாள் தலைவர் மாணிக்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வக்கீல் பாஸ்கரன், நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.