ஊட்டி,
ஊட்டியில் பொழியும் உறைபனியால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 2 முறை சீசன் காலங்கள். முதல் சீசன், ஏப்ரல், மே மாதங்கள். அது கோடை கால சீசன்.
இந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அந்த இரண்டு மாதங்களும் அழகான சூழ்நிலையில் ஊட்யை இரசிக்க தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அதேபோல் இரண்டாவது சீசன் காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தே காணப்படும். ஆனால் இந்த 2–வது சீசன் காலத்தில் ஊட்டியில் மழை பெய்யும். அந்த இரண்டு மாதங்கள் நீடித்த மழைக்கு பின் டிசம்பர் மாதத்தில் கடும் பனிப்பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு நிலைமை வேறாக உள்ளது.
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் ஊட்டியில் பெய்யவில்லை. மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் பயணிக்கின்றன.
மலை மாவட்டமான ஊட்டியில் பிரதான தொழிலான விவசாய தேயிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலை காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டன. நீர்நிலைகள், அணைகள் வறண்டு வருவதால் நகர் பகுதியில் மட்டுமின்றி கிராமப்புற பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஊட்டியில் வழக்கமாக டிசம்பர் மாதம் பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியிலேயே உறைபனி பொழிவு தொடங்கி விட்டது. கடந்த மாதம் இறுதியில் சில நாள்கள் கடும் உறைபனி பொழிவும் நிலவியது.
உறைபனி பொழிவால் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது. ஆனால், பகலில் கோடை காலத்திற்கு இணையாக வெயில் அடித்தது.
இந்த நிலையில் நாடா புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் ஊட்டியில் வியாழாக்கிழமை மதியத்திற்கு பின்னர் சிறிய அளவில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பகலில் கடும் குளிர் நிலவுகிறது. ஏற்கனவே பணத்தட்டுப்பாடு காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
வருகைதரும் ஒரு சில சுற்றுலா பயணிகளும் குளிர் தாங்க முடியாமல் கம்பளி ஆடைகளை அதிகமாக அணிந்தபடி சுற்றிப்பார்த்து செல்கிறார்கள். குளிர் காரணமாக பள்ளி செல்லும் மாணவ–மாணவிகள், தொழிலாளர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் ஊட்டி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
