திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் அருவி மற்றும் கோயில்களுக்குச் செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் அருவி மற்றும் கோயில்களுக்குச் செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தொடர்ந்த பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கும், அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வனத்துறை சார்பாக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தடை விதிக்கக் கோரி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
தனது மனுவில், "திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் என்ற பெயரில் புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமிக்க கோயில்கள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கே அகஸ்தியர் கோயிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் பொதுமக்கள், பக்தர்கள் என பலரும் வந்து குளித்து செல்கின்றனர்.
மேலும் இந்த பகுதியில் நுழைவதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நுழைவு கட்டணம் உள்ளூர் மக்களிடமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தமிழ்நாடு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக பணம் வசூலிக்கப்படுகிறது.
அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு பணம் வசூல் செய்வது பேரூராட்சி, நகராட்சி அல்லது பஞ்சாயத்து ஆகியோர் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், வனத்துறை அலுவலர்கள் இணைந்து பணம் வசூல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. மேலும் நுழைவு கட்டணம் என்பது உள்ளூர் பொதுமக்களிடமும் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அகஸ்தியர் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கும், உள்ளூர் பொது மக்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்" என இசக்கி சுப்பையா கோரியிருந்தார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு:
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள், "சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் கோவில் மற்றும் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது" என்று உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவால் அம்பாசமுத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
