சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு தொடர்பில்லை … ரூபாவின் அதிரடி பேட்டி…
பெங்களூரு பரபரப்பன அக்ரஹாரா சிறையில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தொடர்பில்லை என டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.
ரூபாவின் குற்றச்சாட்டை சத்தியநாராயணராவ் முழுவதுமாக மறுத்தார். இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட 5 அறைகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த குழுவினர் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு நடத்தினர். இந்த விசாரணையின் முதல் கட்ட அறிக்கை இன்று மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய, டிஐஜி ரூபா, சிறை முறைகேடுகளை வெளியே கொண்டு வந்த பிறகு எனக்கு யாரும் மிரட்டல் விடுக்கவில்லை என தெரிவித்தார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், முதலில் தொடர்புடைய சிறை அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
சசிகலாவுக்கு கூடுதல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது எனறும் தெரிவித்தார்.
இந்த முறைகேட்டில் மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவ்வாறு எந்த தகவலும் எனது கவனத்திற்கு வரவில்லை என்றும் டிஐஜி ரூபா தெரிவித்தார்.