குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கல; போலீஸ் பாதுகாப்போட சாராயக் கடை வெக்குறீங்களா? நறுக்குன்னு கேட்ட மக்கள்…
கரூர்
கரூரில் புதிதாக திறக்கப்பட்ட சாராயக் கடையை அடித்து நொறுக்கிய மக்கள், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கல, ஆனால், போலீஸ் பாதுகாப்போட சாராயக் கடை வெக்குறீங்களா” என்று அதிகாரிகளை பார்த்து நறுக்குன்னு கேள்வி கேட்டனர்.
கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியம் மூலிமங்கலத்தில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சாராயக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது.
அந்த சாராயக் கடையை நீதிமன்றத்தின் உத்தரவின்படி மூடிவிட்டு, அதற்கு பதில் மாற்று இடமாக க.பரமத்தி அருகே உள்ள குப்பம் ஊராட்சி செட்டிதோட்டம் என்ற இடத்தில் காங்கேயம்பாளையம் - குந்தானிபாளையம் சாலையின் ஓரத்தில் தேர்வு செய்யப்பட்டு கடை அமைக்கப்பட்டது.
அந்த சாராயக் கடையை நேற்று கடையின் மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், மோகன்ராஜ், விற்பனையாளர்கள் ராஜகோபால், கண்ணப்பன் ஆகியோர் நேற்று பகல் 12 மணியளவில் திறந்தனர்.
இதனையறிந்த மூலிமங்கலம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மக்கள் சாராயக் கடையை நோக்கி கூட்டமாக படையெடுத்தனர். இதனையறிந்த கடையின் மேற்பார்வையாளர்கள் கடையின் முன்பு இருந்த இரும்பு கேட்டை பூட்டினர்.
அதனைத் தொடர்ந்து மக்கள் சாராயக் கடையின் முன்பு இருந்த இரும்பு கேட்டை கீழே தள்ளிவிட்டு உள்ளேச் சென்று சாராயக் கடையில் வைக்கப்பட்டிருந்த சாராய பாட்டில்களை எடுத்து வந்து வெளியே எடுத்து வந்து போட்டுடைத்தனர். பின்னர், கடையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி தாசில்தார் சந்திரசேகர், துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணி, க.பரமத்தி காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறியது:
“சாராயக் கடை அமைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி விவசாய நிலங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் பெரும்பாலானவர்கள் ஆடு, மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்தப் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வரும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும், எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகிறோம். அதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்காமல், சாராயக் கடைகளை காவலாளர்களின் பாதுகாப்போடு திறக்கிறது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
குப்பம் ஊராட்சி பகுதியில் சாராயக் கடை அமைக்கக் கூடாது. மீறி அமைத்தால் அடித்து நொறுக்குவோம். கட்டிடத்தை இடிப்போம்” என்று தங்களது முடிவை அவர்கள் கூறினர்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள், “உங்களது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கிறோம்” என்று வழக்கமாக கூறும் அதே பதிலைக் கூறினர்.
இதனை ஏற்றுக் கொண்ட மக்கள் அங்கிருந்து கலைந்தனர்.