நிர்மலாதேவி விவகாரம்: முருகன், கருப்பசாமிக்கு மே. 14 வரை நீதிமன்ற காவல்!
உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கு மே 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலா தேவி, 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக வெளியான ஆடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நிர்மலா தேவி மீது புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுடன் நிர்மலாதேவி பேசிய ஆடியோவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ன் பெயர் அடிபட்டதால், இது குறித்து ஆளுநர் விளக்கமளித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சந்தானம் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சந்தானம் தலைமையிலான குழு, நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தியது.
நிர்மலா தேவி விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தின்படி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சிபிசிஐடி போலீசார் விசாரனை நடத்தினர். இருவரது செல்போன் எண்ணில் உள்ள தொடர்புகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே திருச்சுழி அடுத்துள்ள கேத்தநாயக்கன்பட்டியில் உள்ள கருப்பசாமியின் மைத்துனரிடம் இருந்த செல்போனைக் கைப்பற்றினர். அந்த செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்கள் யாருடையது என்கிற கோணதிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. புத்தாக்க பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர்களிடமும் நேற்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
முருகன், கருப்பசாமி இருவரது சிபிசிஐடி காவல் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று அவர்கள் சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் முருகன், கருப்பசாமிக்கு மே 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டுள்ளார்.