மணக்கோலத்தில் இன்று குரூப் 4 தேர்வு, திருமணம் முடிந்தவுடனே ஒரு பெண் எழுதினார். இச்சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பானது.

விழுப்புரம் மாவட்டத்தில் 186 தேர்வு மையங்களில் 72 ஆயிரத்து 943 பேர் தேர்வை எழுதினர். 32 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு, தமிழகம் முழுவதும் இன்று 301 மையங்களில் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அ‌ளவிற்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர்

விழுப்புரம் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் அகிலாண்டேஸ்வரி. இவருக்கும், தணிக்கலாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (எ) பிரதீப்புக்கும் இன்று காலை விழுப்புரத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் மணப்பெண் அகிலாண்டேஸ்வரி குரூப் 4 போட்டித் தேர்வு எழுத புறப்பட்டார். அவருக்கு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்தனர். தேர்வு எழுதிய அகிலாண்டேஸ்வரி பொறியியல் துறையில் பி.இ. (இசிஇ) முடித்தவர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 173 மையங்களில் 52 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுதினர். கவுந்தப்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 123 மையங்களில் 42 ஆயிரத்து 584 பேர் தேர்வு எழுதினர். 10 பறக்கும் படை உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தேர்வு எழுதுபவர்கள், தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்றுவர வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டன.

இதேபோல், திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்றது.