New building act issued by tamilnadu govt

அடுக்குமாடி உள்ளிட்ட கட்டுமான பணியில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், அந்த Builderக்கு மூன்றாண்டுகள் சிறை, அல்லது, மொத்த திட்ட மதிப்பீட்டில், 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மத்திய அரசால் இயற்றப்பட்ட கட்டிட, மனை விற்பனை சட்டத்தை பின்பற்றி, தமிழ்நாடு அரசு, கட்டிட மனை விற்பனை விதிகள்-2017ஐ வகுத்து, கடந்த 22 ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதன்படி, கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் உருவாக்கப்படும் என்றும் இதன் அலுவலகம் சென்னை எழும்பூரிலுள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையின் மூன்றாம் தளத்தில் தற்காலிகமாக இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டிட, மனை விற்பனை விதிகளின் படி, 500 சதுரமீட்டர் பரப்பளவு அல்லது எட்டு மாடிகளுக்கு மேல் உள்ள அனைத்து கட்டிட மனை விற்பனையில் ஈடுபடும் முகவர்கள், குழுமத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது தமிழக அரசு வெளியிடப்பட்டிருக்கும் விதிகள், கட்டுமான பணிகள் நடந்தேறிவரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்யாமல் எந்தவொரு கட்டிடத்தையும், மனையையும் விற்பனை செய்ய முடியாது என்றும் தமிழக அரசின் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன் மூலம் நடைபெறும் கட்டுமான பணி என்றால், ஒதுக்கீட்டாளர் என வகைப்படுத்தப்படும் வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கும், 70 சதவிகித தொகையை, திட்டத்திற்காக வங்கியொன்றில் தனிக்கணக்கு தொடங்கி, அதில் டெபாசிட் செய்து, முறைப்படி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் முடிந்து, அது அடுக்குமாடி குடியிருப்புகள் என்றால், அந்த மனைகளை விற்கும் பில்டர், Carpet Area எனப்படும் கம்பள பரப்பளவு அடிப்படையிலேயே, வாடிக்கையாளர்களுக்கு விற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளருக்கு குடியிருப்பை ஒதுக்கீடு செய்த ஐந்து வருட காலத்திற்குள், கட்டுமானம், வேலைப்பாடு, தரம் ஆகியவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்த குறைபாடுகளை தனது சொந்த செலவில் பில்டர் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்டுமான பணியில் ஏதேனும் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு, உறுதி செய்யப்பட்டால், அந்த குறிப்பிட்ட பில்டருக்கு, திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் அபராதம், அல்லது, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்டர், கட்டுமான பணி மேற்கொள்ளும் இடத்தின் பத்திரப்பதிவு தொடங்கி, பணி நிறைவுச் சான்றிதழ் வரையில் அனைத்தையும், ஒழுங்குமுறை குழுமத்தின் இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது