மழை மற்றும் புயல் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக வருவாய்த் துறை செயலாளர் சந்திரமோகன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இதே டிசம்பர் 1ம் தேதி தொடங்கிய கனமழை 10 நாட்களுக்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை உள்பட 5 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கின. லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடமைகளையும், பொருட்களையும் இழந்து தவித்தனர்.
இந்நிலையில், நாடா புயல் உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என அறிவித்தது.
அதை தொடர்ந்து தஞ்சை, திருச்சி, வேதாரண்யம், சென்னை, திருப்பத்தூர், திருவாரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இதையொட்டி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய்த் துறை செயலாளர் சந்திரமோகன், பொதுமக்கள் யாரும் புயல் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். புயல், மழை குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் மக்கள் கவனிக்க வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க பாதுகாப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. நீர் தேங்கும் பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
